articles

img

ஒளிச்சேர்க்கையை தொடங்க ஒரே ஒரு ஃபோட்டான் மட்டுமே தேவை

ஒளிச்சேர்க்கையை தொடங்க ஒரே ஒரு ஃபோட்டான்  (ஒளி அல்லது மின்காந்த அலைகளின் ஆற்றல் அடங்கிய சிறு அலகு) மட்டுமே தேவை என்று ஜூன் 14 நேச்சர் இதழில் அறிவியலாளர்கள்  அறிவித்துள்ளார்கள். ஒரு போட்டான் உள்வாங்கியவுடன் ஒளிச்சேர்க்கை தொடங்குகிறது என்று நீண்ட நாட்களாக அனுமானித் திருந்தாலும் அது நேரடியாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் வேதியியலாளர் கிரஹாம் பிளமிங். சூரிய ஒளி பார்ப்பதற்கு மிகவும் பிரகாசமானதாக இருந்தாலும் தாவரங்களிலும் பேக்டீரியாக்களிலும் உள்ள குளோரோபில் அல்லது பேக்டீரியோ குளோரோபில் நானோமீட்டர் அளவுகளிலேயே உள்ளதால் அவற்றின் மீது சில போட்டான்களே விழுகின்றன. ஒளிச்சேர்க்கை தொடர்பான சோதனைச்சாலை ஆய்வுகள் அதிக ஆற்றல் கொண்ட லேசர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன. இதற்குப் பதிலாக கிரகாம் குழுவினர் ஒரு நேரத்தில் இரண்டே ஃபோட்டான்களை மட்டும் வெளியிடும் ஒளி ஆதாரத்தை பயன்படுத்தினர். அதில் ஒரு போட்டான் எப்பொழுது ஃபோட்டான்கள் வெளியிடப்பட்டன என்பதை ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கும் பணியை செய்தது. இரண்டாவது ஃபோட்டான் ஒளிச்சேர்க்கை செய்யும் ஒரு வகை பேக்டீரியாவிலிருந்து பெறப்பட்ட ஃபோட்டான் உள்வாங்கும் LH2 எனும் மூலக்கூறுகளைக் கொண்ட கரைசலுக்குள் செலுத்தப்பட்டது.  இயல்பாக  நடைபெறும் ஒளிச்சேர்க்கை வினையில் ஒரு LH2 மூலக்கூறு  ஃபோட்டானை உள்வாங்கி அடுத்த LH2 மூலக்கூறுக்கு அனுப்பும். இவ்வாறு கை மாறி கை மாறி விளையாடும் பந்து விளையாட்டு போல ஃபோட்டனானது LH1 எனும் இன்னொரு வகை மூலக்கூறிடம் அடைந்து அங்கிருந்து வினை புரியும் மையத்திற்கு செல்கிறது. அங்கு ஒளி ஆற்றலானது பேக்டீரியா பயன்படுத்தும் வகையிலான ஆற்றல் அமைப்பாக மாற்றப்படுகிறது. கிரகாம் நடத்திய சோதனையில் LH1 சேர்க்கப்படவில்லை. ஆகவே உள்நுழைந்த முதல் ஃபோட்டானிலிருந்து வேறுபட்ட  அலைநீளம் கொண்ட ஃபோட்டானை LH2 மூலக்கூறு வெளியிட்டது. இதிலிருந்து ஒளிச்சேர்க்கையின் முதல் படியான முதல் LH2 வளையத்திலிருந்து இரண்டாவதிற்கு ஆற்றல் மாற்றும் நிகழ்வு நடந்தது அறியப்பட்டது.  அதாவது ஒளிச்சேர்க்கை வினை தொடங்க ஒரே ஒரு ஃபோட்டான் மட்டுமே தேவை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இயற்கையில் நடப்பதை நம்மால் காண முடிகிறது என்பதே இதன் முக்கியத்துவம் என்கிறார் இன்னொரு ஆய்வாளர்.